காதல் திருமணம் செய்த மகள் - நடுரோட்டில் பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்
நாமக்கலில் காதல் திருமணம் செய்த மகளை திரும்பி வருமாறு அழைத்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைசேர்ந்த பச்சியப்பன் என்பவரது மகள் பவதாரணி, அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பவதாரணி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை போலீசார் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி விஜயன் 2 பேரிடமும் விசாரணை நடத்தியதில் பவதாரணி கணவர் மணியுடன் தான் செல்வேன் என கூறியுள்ளார். இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து போலீசார் அவர்களை தங்களது ஜீப்பில் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு போலீஸ் ஜீப் முன்பு படுத்து அழுது புரண்டு போராடினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.