நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்பேன்- சீமான் ஆவேசம்
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் இங்கே உள்ளே வரட்டும், இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் நான் வைத்து விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில், 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சத்திரம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் சீமான் பேசியதாவது - கட்சி தொடங்கி அரசியல் நடத்த வந்தவனா நான்? படமெடுத்து பிழைக்க வந்தவன் நான். ஆனால், என் இனத்திற்கு மானமா, வருமானமா என வரும் பொழுது என் இன மானம் தான் எனக்கு முக்கியம் என்று தோன்றியது.
அதனாலேயே முடிவெடுத்தேன். அதிமுக அம்மாவின் ஆட்சி என்று கூறுகிறார்கள் டிடிவி தினகரன், அம்மாவின் ஆட்சி நடத்துவோம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் அம்மா இங்கு இல்லை. அதுபோல் மு.க.ஸ்டாலினால் அப்பாவின் ஆட்சியைப் போல் நடத்துவேன் என்று சொல்ல முடியுமா?

நிலவைக் காட்டி சோறு ஊட்டலாம். மயிலை காட்டி சோறு ஊட்டலாம், ஆனால் பூச்சாண்டியை காட்டி சோறு ஊட்டுகிறார்கள். அதுதான் பாஜக பூச்சாண்டி. குரங்கு கையில் பூமாலை. இவர்களின் கையில் நாடு உள்ளது. ஒரு புத்தகம் படிப்பது இல்லை, எந்த சிந்தனையும் வாசிப்பது கிடையாது. எனக்கு என்னமோ இவர்கள் தினத்தந்தி படிக்கிறார்களா என்று கூட தெரியவில்லை.
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும், நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்து விடுவேன் என்று பேசினார்.