நானும், என் அப்பாவும் நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் - நமல் ராஜபக்ச டுவிட்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது.
இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, மகிந்த ராஜபக்ச வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கடும் கோபத்தில் உள்ள இலங்கை மக்கள் கோட்டாபய, மகிந்தாவின் தந்தை ராஜபக்சேவின் நினைவு ஸ்தூபியை உடைத்தெரிந்த மக்கள் சிலையையும் உடைத்து சுக்குநூறாக வீசினர்.
இதற்கிடையே புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவர் என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றமான சூழ்நிலை இலங்கையில் தற்போதுவரை காணப்படுகிறது.
இந்நிலையில், சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், இலங்கையிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோவிற்கு இலங்கை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து ராஜபக்சேவின் மகனும், எம்பியுமான நமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம், எனக்கும் என் தந்தைக்கும் கிடையாது. இலங்கை வன்முறை சம்பவம் குறித்து வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
