வெளியானது நீட் தேர்வு முடிவுகள் - தமிழக அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர்கள்
நீட் நுழைவுத் தேர்வில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி, மாணவர் பிரவீன் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
இதன் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில் 720 மதிப்பெண்களுடன் தெலங்கானாவைச் சேர்ந்த மிருணால் குட்டேரி, டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கார்த்திக் ஜி நாயர் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவர் பிரவீன் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அர்ச்சித்தா என்ற மாணவியை 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.