நளினி ஒரு துரோகி.. தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும் - அனுஷா டெய்சி எர்னஸ்ட்
நளினி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நளினி விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன், முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும், (தற்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர்) ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவருமான அனுஷா டெய்சி எர்னஸ்ட் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘ராஜீவ் காந்தி படுகொலையின் போது நான் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அந்த குண்டுவெடிப்பில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என் விரல்கள் துண்டிக்கப்பட்டது, உடல் முழுவதும் பெருமளவில் பாதிப்படைந்தது. குற்றவாளிகளை நேரில் பார்த்தது நான். நளினி உள்ளிட்ட 6 பேர் தண்டனை பெற்றார்கள். மேலும் அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
அனுஷா டெய்சி எர்னஸ்ட்
31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்று தற்போது குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்கள் மூலம் விடுதலை ஆகி உள்ளனர். நளினி என்னை பார்த்ததே இல்லை என தெரிவித்திருக்கிறார். என்னுடன் பணி புரிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதவியுடன் தான் என்னை அடையாளம் காண்பித்தார் என்று பேட்டி அளிக்கிறார்.
என்னுடைய சாட்சியை வைத்துக்கொண்டு மட்டும் நளினியை கைது செய்யவில்லை. தண்டனை தரவில்லை. 1000- ற்கும் மேற்பட்ட சாட்சிகள் வைத்து தான் தண்டனை கொடுத்தார்கள். அப்போது நீதிபதிகள் தவறானவர்களா? நான் பொய் சாட்சி என்றால் அப்பொழுது நீதிமன்றம் பொய் சாட்சிகளை வைத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டதா? குண்டுவெடிப்பின் போது நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லை, இந்திராகாந்தி சிலை அருகில் தான் இருந்தேன் என்று பொய்யாக நளினி தெரிவித்து வருகிறார்.
பொய் மேல் பொய்
ஆனால் அப்பொழுது வந்த பத்திரிக்கையில் கூட்டத்தில் நளினி இருப்பது தெரிய வருகிறது. முருகன் என்னுடைய கணவன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். முருகன் என்பவர் விடுதலைப் புலிகளை சேர்ந்தவர் அப்படி என்றால் விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் நளினியா? முருகன் விடுதலைப் புலிகளை சேர்ந்தவர் என்றால் அதன் கொள்கைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது.
திருமணம் செய்து கொண்டால் எப்போது அவர் திருமணம் செய்தார், அவர் எப்படி கர்ப்பம் ஆனார் என்பது தெளிவுபடுத்தவில்லை. பொய் மேல் பொய் சொல்லி வருகிறார் நளினி. நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எத்தனை பேர் பூ இழந்துள்ளனர்.
கொலைகாரி
நளினி ஒரு துரோகி, கொலைகாரி, தற்போதாவது நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு இந்திய மற்றும் தமிழக மக்களிடையே நளினி மன்னிப்பு கேட்க வேண்டும். தீவிரவாதத்தில் போராடினால் வெற்றி கிடைக்காது. அகிம்சை வழியில் போராடுவது தான் நேர்மையான வழி. தீவிரவாதத்தில் ஈடுபட்ட இலங்கையின் நிலைமை இன்று நாம் பார்க்கிறோம். ஒன்றும் அறியாத மக்களின் உயிரை எடுக்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம்’ என தெரிவித்தார்.