கோவில்களை மக்கள் நெருங்கவிடாமல் திட்டமிடும் ஜோசப் விஜய் அரசு - பாஜக கண்டனம்
தமிழக மக்கள் கோவில்களை நெருங்கவிடாமல் தடுக்கத் திட்டமிடும் ஜோசப் விஜய் அரசு என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
முருகன் கோவிலில் கட்டண உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில், முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நாள்தோரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுப்பது உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள கோவில் நிர்வாகம் இது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
பாஜக கண்டனம்
அரசின் இந்த முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சேவைக் கட்டணங்களை திரு. ஜோசப் விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, கண்டனத்திற்குரியது.

சண்முகார்ச்சனை, ஒன்பது கால பூஜை, அபிஷேக தரிசனக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் மூன்று மடங்கு வரை உயர்த்தும் இத்திட்டம் கோவில் வருவாயைப் பெருக்கவா? அல்லது ஏழை எளிய நடுத்தர மக்களை சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதற்கா?
"கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே பயன்படுத்தப்படும்" என்று ஆளுநர் உரையில் முழங்கிவிட்டு, இன்று அடித்தட்டு மக்களை கோவில் பக்கமே நெருங்கவிடாதபடி கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது தான் தூய சக்தியின் உண்மை முகமா?
தமிழக மக்கள் கோவில்களை நெருங்கவிடாமல் தடுக்கத் திட்டமிடும் திரு. ஜோசப் விஜய் அரசு!
— Nainar Nagenthran (@NainarBJP) June 23, 2026
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சேவைக் கட்டணங்களை திரு. ஜோசப் விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு,… pic.twitter.com/GJgLXhuKIX
"அனைவருக்குமான அரசு இது" என்று முதல்வர் திரு. விஜய் அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், கோவில்களில் நிலவும் இதுபோன்ற தரிசன மற்றும் சேவைக் கட்டணமுறையை முதலில் கைவிட வேண்டும்! கோவில் வருவாயைப் பெருக்கும் நோக்கில் பக்த கோடிகள் மீது நிதிச் சுமையை ஏற்றாமல், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.