திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
𝐒𝐈𝐑க்கு எதிரான னைத்துக்கட்சி கூட்டம் மக்களை மடைமாற்ற நடத்தப்படும் திசைதிருப்பு நாடகம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
𝐒𝐈𝐑க்கு எதிரான னைத்துக்கட்சி கூட்டம்
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கான(SIR) அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை எதிர்த்து, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன. நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் SIRக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நயினார் நாகேந்திரன்
𝐒𝐈𝐑 தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!

ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!
ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே" என தெரிவித்துள்ளார்.