பாஜக சட்டமன்றத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்
பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வென்றுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து ஒரு பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்துக்குள் நுழைகிறார்.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் சென்னை தியாகராயநகர் பாஜக தலைமையகத்தில் கிஷன் ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் எனக் கூறினார்.