கொடூர தாக்குதல்; இளைஞர் கஸ்டடி மரணம் - முதல்வர் கூறப் போகும் பதில் என்ன?
லாக் அப் மரணத்தில் முதல்வர் என்னக் கூறப்போகிறார் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாக் அப் மரணம்
சிவகங்கை, மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அங்கு அஜித் ( 28) என்பவர் கோயிலின் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (42) தனது தாய் சிவகாமியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்து, வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி, தன் அம்மாவை கோயிலுக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார்.
அஜித் தனக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், அருகில் இருந்த மற்றொருவரிடம் காரை நிறுத்த சொல்லியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நிகிதா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, தன் பையில் இருந்த தாலி செயின், வளையல், தங்க மோதிரம் உள்ளிட்ட 9.5 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் அஜித்தை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து விடுவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நயினார் நாகேந்திரன் கேள்வி
விசாரணையில் அஜித் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்?
இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை? இதுவரை தி.மு.க., ஆட்சியில் 24க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா?
தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.