எம்.பி. ஆகும் தகுதி எனக்கு இல்லையா... காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விளாசிய நக்மா
மாநிலங்களவை எம்.பி. ஆகும் தகுதி எனக்கு இல்லையா? என காங்கிரஸ் கட்சிக்கு நடிகை நக்மா கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு உட்பட மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாகிறது. இதனை முன்னிட்டு புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப்கார்கி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதால் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா ட்விட்டரில் அக்கட்சியை சரமாரியாக விளாசியுள்ளார்.
SoniaJi our Congress president had personally committed to accommodating me in RS in 2003/04 whn I joined Congressparty on her behest we weren’t in power thn.Since then it’s been 18Yrs they dint find an opportunity Mr Imran is accommodated in RS frm Maha I ask am I less deserving
— Nagma (@nagma_morarji) May 30, 2022
அவர் தனது பதிவில், “நான் கடந்த 2003-04 ஆம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தபோது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி என்னிடம் உறுதியளித்தார். ஆனால் அப்போது நாம் ஆட்சியில் இல்லை. அதிலிருந்து 18 ஆண்டுகள் ஆகியும் மாநிலங்களவையில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக இம்ரானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.ஆகும் வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா?' என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.