போதை பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூரில் தமிழனுக்கு துாக்கு..!
கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு 42.72 கிராம் 'Diamorphine' 'டயாமார்ஃபைன்' என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் தர்மலிங்கம் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 21. 'டயாமார்ஃபைன்' புற்றுநோயால் ஏற்படும் அதிதீவிர வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
அதேவேளையில் போதைக்காக இதை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமது தொடைப்பகுதியில் கயிறுகொண்டு கட்டப்பட்டிருந்த உறையில் 'டயாமார்ஃபைன்' கடத்தி வந்த குற்றச்சாட்டுக்காக சிங்கப்பூர் போலிசார் நாகேந்திரனை கைது செய்தனர்.
பின்னர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக மரண தண்டணை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய் கிழமை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், உண்மைத்தன்மை மற்றும் சட்டத்தின்படி, நாகேந்திரனின் மனு அடிப்படையற்றது என்றும், விசாரிப்பதற்கான தகுதியற்றது என்றும் குறிப்பிட்டார்.
"ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரம் ஏதும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை" அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என சுட்டிகாட்டி மரண தண்டனைக்கு எதிரான அவரது மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று காரணமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
சிங்கப்பூர் அதிபர் நாகேந்திரன் கருணை மனுவை நிராகரித்த நிலையில் அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன நடக்க போகிறதோ என பதைப்பதைப்புடன் காத்திருக்கின்றனர்.
அவருக்கு எந்த நேரத்திலும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.