என்னோட பொண்ண 135 நாள்களாகப் பார்க்கலை : உலகக் கோப்பைப் போட்டியை விட்டு விலகும் மஹேலா ஜெயவர்தனே
இலங்கை அணியின் ஆலோசகராகப் பணியாற்றி வரும் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே, கொரோனா பயோ பபுள் வளையத்தை விட்டு வெளியேறவுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டி - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பைப் போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வரை தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் நாளை முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியின் ஆலோசகராகப் பணியாற்றி வரும் முன்னாள் மஹேலா ஜெயவர்தனே,கொரோனா பயோ பபுள் தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறவுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இது மிகவும் சிரமமானது. இப்போதுதான் எண்ணிப் பார்த்தேன். கடந்த ஜூன் முதல் 135 நாள்களாக கொரோனா பயோ பபுள் வளையத்தில் உள்ளேன். இந்த நிலையில் . ஒரு தந்தையாக எனது மகளைப் பல நாள்களாகப் பார்க்கவில்லை.
இதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். நான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். நான் ஐபிஎல் போட்டியில் பணியாற்றியதால் ஷார்ஜா மற்றும் இதர மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்கிற திட்டத்தை உருவாக்கித் தருவேன் என்றார்.
தி ஹண்ட்ரெட் டி20 போட்டியை வென்ற சதர்ன் பிரேவ்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே பணியாற்றினார்.
இந்தப் போட்டியை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்றில் இலங்கை அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.