இந்திய அணியின் குட்டி சேவாக் இவர்தான்: முத்தையா முரளிதரன் புகழாரம்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் பிரித்வி ஷாவின் பேட்டிங்கை புகழ்ந்துள்ளனர்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன் போன்றவர்கள் டி20 விளையாடுவதுபோல் விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனிடையே பிரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டைவிட ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடியவர்.
காரணம், அவர் சேவாக்கை போன்ற வீரர். அவரைப் போலவே அதிரடியாக விளையாடக் கூடிய குணம் கொண்டவர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் புகழ்ந்துள்ளார். மேலும் இந்திய அணி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். அபாயகரமான பேட்ஸ்மேனாக இவர் திகழ வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.