‘’இஸ்லாமியர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" - பா.ஜ.க முதல்வரின் பேச்சால் சர்ச்சை
இஸ்லாமியர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவது பொறுத்துக்கொள்ள முடியாது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
ஹரியானா மாநிலம் , குர்கான் நகரில் தொழுகை நடத்துவதற்காக 2018 ஆம் ஆண்டே இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது . சில நாட்களாக வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் .
மேலும் தொழுகை பகுதியில் மாட்டுச் சாணங்களைக் கொட்டி தொழுகைக்கு இடையூறும் செய்துள்ளனர் இதையடுத்து சீக்கிய மதத்தினர் தங்களின் கோயில்களில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொள்ளலாம் என அறிவித்தனர் . பிறகு இஸ்லாமியர்கள் அங்குத் தொழுகை செய்தனர் .
இருப்பினும் குர்கான் பகுதியில் பதற்றமான நிலையே நீடித்து வருகிறது . இந்நிலையில் , இஸ்லாமியர்கள் திறந்த வெளியில் தொழுகை செய்வது பொறுத்துக்கொள்ள முடியாது என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
விரைவில் இதற்கு சுமுக தீர்வு எட்டப்படும் என்றும் இஸ்லாமியர்கள் வீட்டிலோ அல்லது அவர்களது வழிபாட்டுத் தலங்களிலேயே தொழுகை செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.
மனோகர் லால் கட்டாரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் முதல் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்