வேலூர் மத்திய சிறையில் பரோல் வழங்கக்கோரி முருகன் உண்ணாவிரதம்
வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனக்கு பரோல் வழங்கக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதில் நளினி பரோலில் வெளிவந்து தற்போது காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
அதேபோல் இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் உடல்நலககுறைவு காரணமாகவும் முறையான சிகிச்சை பெறுவதற்காகவும்,
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பரோலில் வெளியில் வந்திருந்த நிலையில் அண்மையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் சிறையில் உள்ள முருகனும் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வரும் நிலையில் அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து இன்று காலை உணவு சாப்பிட மறுத்து பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் தெரிவித்துள்ளார்.
அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேஎலும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முருகன் முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.