ஐபிஎல் கிரிக்கெட்: 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது.
இந்நிலையில் ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குவிண்டன் டிகாக்(40) முஜீப் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய பொல்லார்ட், அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். 3 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்த பொல்லார்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக குவிண்டன் டிகாக் 40 ரன்கள் அடித்தார். ஐதராபாத்தை பொறுத்தவரை முஜீப் 2 விக்கெட், விஜய் சங்கர் 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் போர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் 6 ஓவரில் 59 ரன்கள் சேர்ந்திருந்தது.
ஆனால் போர்ஸ்டோ ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தின் போக்கே மாறியது அணியின் ஸ்கோர் 67 ரன்களில் இருந்தபோது போர்ஸ்டோ அவுட்டானார். இதன் பிறகு சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் மும்பை அணி தந்து 2வது வெற்றியையும் ஐதராபாத் அணி தொடர்ந்து 3வது தோல்வியும் அடைந்துள்ளன.