‘’ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ‘’ - 62 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து , அதிரடி காட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள் !
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் போட்டியின் 2-ம் நாளான இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் - பட்டேல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயத்தினர். 311 பந்துகளை சந்தித்த மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதேபோல், 128 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. புதிய கேப்டன் டாம்லாதமும், வில் யங்கும் ஆட்டத்தை தொடங்கினார். இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் கைப்பற்றியதால், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷத்துடனே பந்துவீசினர்.
கடந்த டெஸ்டில் சிறப்பாக ஆடிய வில் யங் முகமது சிராஜ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் லாதம் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து சிராஜ் பந்திலே ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மூத்த வீரர் ராஸ் டெய்லரை சிராஜ் போல்டாக்கினார். முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் சிறப்பாக தொடங்கிக் கொடுக்க, அடுத்து அஸ்வினும், அக்ஷர் படேலும் தங்கள் சுழலில் நியூசிலாந்தை திணறடித்தனர்.
17 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 31 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. உலககோப்பை மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அக்ஷர் படேல் பந்தில் 8 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
கடந்த டெஸ்டில் ஜொலிக்காத ஹென்றி நிகோலஸ் நெருக்கடியான நேரத்தில் 7 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டானார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை தனி ஆளாக போராடி தடுத்த ரச்சின் ரவீந்திரா இந்த முறையும் நிதானமாக ஆட முயற்சித்தார். ஆனால், ஜடேஜாவிற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஜெயந்த் யாதவ் சுழலில் ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய டிம் சவுதியும் அஸ்வின் பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அந்த அணியில் கைல் ஜேமிசன் மட்டும் டாம் லாதத்திற்கு பிறகு இரட்டை இலக்க ரன்களை கடந்தார். அந்த அணி 26 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை எடுத்தது.
அடுத்த சில நிமிடங்களில் வில்லியம் சோமர்வில்லேவும் அஸ்வின் சுழலில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.
நியூசிலாந்திற்காக இந்த இன்னிங்சில் அதிகபட்ச ரன்னான 17 ரன்களை அடித்த கைல் ஜேமிசன் 10வது விக்கெட்டாக அக்ஷர் படேல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்திய அணி சார்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 8 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அக்ஷர் படேல் 9.1 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களுடன் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியா 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.