மும்பை மின்தடை சீன ஹேக்கர்களின் சதியா? அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வறிக்கை
சீன அரசுடன் தொடர்புடைய சில குறிப்பிட்ட சீன ஹேக்கர்கள் ஆன்லைன் மூலம், இந்திய இணைய தளத்தில் ஊடுருவி, இந்திய மின்தொகுப்பை சீர்குலைக்க சதி செய்திருப்பதாக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரெகார்டட் ப்யூச்சர் நிறுவன ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் மிகப் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. இது குறைந்தபட்சமாக 2 மணி நேரம் நீடித்தது. அப்போது கொரோனா கால கட்டம் என்பதால் பல மருத்துவமனைகளை செயல்பட முடியாமல் தவித்தன. வீட்டில் இருந்தபடி, அலுவலக வேலை பார்த்து வந்த பணியாளர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.
ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதால், இந்த மின்தடை குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

ஆனால், இந்த மின்தடைக்கு, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஊடுருவி தீங்கிழைக்கும் மென்பொருளை, சீன அரசுடன் தொடர்புடைய ரெட்எக்கோ என்ற அமைப்பு, இந்திய மின்தொகுப்பு வடங்களில் செலுத்தியதே காரணமாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் தொடர்பான துறையில் உள்ள 12 இந்திய நிறுவனங்களின் 21 ஐபி. முகவரிகளை குறி வைத்து அதற்கு எதிரான சதியில் சீன ஹேக்கர்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளன
இந்தியாவையும், அதன் தனியார் துறை அமைப்புகளையும் குறிவைத்து, சீன அரசின் ஆதரவோடு பல அச்சுறுத்தும் இணைய தளக் குழுக்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது