முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, தமிழக அமைச்சர்கள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.70 அடியாக இருந்த நிலையில், கடந்த அக்.29-ம் தேதி அணையிலிருந்து ரூல் கர்வ் முறையை கடைப்பிடித்து, ஷட்டர்கள் வழியாக கேரளப் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்தாமல் அணையிலிருந்து உபரி நீர் என்ற பெயரில் கேரளப் பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும், அதைக் கண்டித்து நவ.9-ல் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.
கடந்த அக்.29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணைக்குச் சென்று நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.