2 சென்னை அணி வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் உறுதி - முன்னாள் வீரர் உறுதி
நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 2 சென்னை அணி வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் உறுதி என முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கணித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு மற்ற அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.
முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் முதல் அணிகளாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உம்ரன் மாலிக், மொஹ்சின் கான், சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி, திலக் வர்மா போன்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக பங்களிப்பை அளிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியில் விளையாடி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகேஷ் சவுத்ரி மற்றும் சிம்ரஜித் சிங் ஆகியோருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரரான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் தோனி சிறப்பாக உருவாக்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.