இவ்வளவு ரன் வரும்னு நாங்க எதிர்பார்க்கல - ருத்ராஜை புகழ்ந்து தள்ளும் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை அணியின் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று முதல் தொடங்கியுள்ளன.
துபாயில் நேற்றிரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அணியில் வெற்றிக்கு உதவினார்.
இதையடுத்து, களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி கூறும்போது,
'முப்பது ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில், எங்களுக்கு சிக்கலான நிலைதான். கவுரவமான ஸ்கோரை எட்ட போராட வேண்டியிருந்தது.
ருதுராஜூம் பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான ஸ்கோரை எடுக்க உதவினார்கள்.நாங்கள் எதிர்பார்த்தது 140 ரன்கள்தான்.
ஆனால், 160 ரன்களுக்கு அருகில் சென்றது சிறப்பானது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அதனால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.
ராயுடு காயமடைந்து வெளியேறிய பிறகு அதில் இருந்து அணி மீண்டு வருவது கடினம் என்றே நினைத்தோம். இருந்தாலும் புத்திசாலித்தனமான பேட்டிங்கால் சிறப்பாக ஆட்டத்தை முடித்தோம்.
தொடக்கத்தில் இருந்தே, ஒரு பேட்ஸ்மேன் (ருத்ராஜ்) கடைசிவரை பேட்டிங் செய்தது விவேகமானது' என்றார்.