நானும் பிராவோவும் அடிக்கடி சண்டை போடுவோம் - மனம் திறந்த தோனி
பந்துவீசுவது தொடர்பாக எனக்கும் பிராவோவுக்கு அடிக்கடி சண்டை நடக்கும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராத் தலைமை யிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நேற்று மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்படியாக படிக்கல் 70 ரன்னும், கோலி 53 ரன்னும் அடித்திருந்தனர்.
சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த பெங்களூரு அணி, 200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களும் டுபிளி சிஸ் 31 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளி களை பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தில் டெல்லி அணியும், 3-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.
போட்டிக்குப் பின் பேசிய தோனி கூறியதாவது: பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. ஆனால், 9வது ஓவரில் ஆடுகளம் மெதுவான தன்மைக்கு மாறிவிட்டது.
இந்த நேரத்தில் இறுக்கமாக பந்துவீச வேண்டியது அவசியம். தேவ்தத் ஒரு முனையில் ஆடிக் கொண்டிருக்கும்போது ஜடேஜா அதை சரியாக செய்தார்.
பிராவோ, ஹசில்வுட், ஷர்துல், தீபக் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். சில சூழ்நிலைகளில் எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுவார் என்பது, மனதில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
மொயின் அலியிடம், அடுத்து உங்களை பந்துவீசச் சொல்வேன் என்று கூறியிருந்தேன். ஆனால், பிராவோவுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தேன். அவர் நினைத்த மாதிரியே விக்கெட் எடுத்தார்.
எங்கள் வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், சார்ஜா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. பிராவோ சிறப்பாக செயல்பட்டார். அவரை நான் சகோதரன் என்று அழைக்கிறேன்.
பந்து வீசுவது குறித்து அவருக்கும் எனக்கும் எப்போதும் சண்டை நடக்கும். அவர் பந்துகளை மெதுவாக வீசி விக்கெட் எடுப்பவர்.
அது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்பதையும் ஒரு ஓவரில் வீசும் ஆறு பந்துகளையும் வெவ்வேறுவிதமாக வீசும்படியும் சொன்னேன்.
எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் அவர் பொறுப்புகளை ஏற்றுக் கொள் கிறார்.
இவ்வாறு தோனி கூறினார்.