தோனிக்கு ராசியான நாளாக மாறிய செப்டம்பர் 24 - நேற்றைய நாளில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி ராசியான நாள் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அப்படி என்ன விஷேசம் என நினைக்கிறீர்களா? - இதற்கு நாம் 14 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். அதாவது 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இளம் வீரர் தோனி தலைமையிலான இந்திய அணி பைனலுக்கு முன்னேறி இருந்தது. அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது விளையாட்டின் பரம எதிரியான மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி.
ஜோகன்ஸ்பர்க், வான்டரர்ஸ் மைதானத்தில் நடந்த அப்போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கவுதம் கம்பீர் நிலைத்து நின்று 54 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர்.
பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது.நடு வரிசையில் களமிறங்கிய கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கடைசி ஓவர் வரை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்தார். அவரின் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு பரபரப்பை கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு இறுதி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததோடு சாம்பியன்ஷிப்பை வெல்ல 13 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த நேரத்தில் ஒரு ஆச்சரியத்தை தோனி நிகழ்த்தினார். பந்தை அனுபவமே இல்லாத ஜோகிந்தர் ஷர்மாவிடம் ஒப்படைத்தார். முதல் இரண்டு பந்துகளை வீணாக்கிய மிஸ்பா 3வது பந்தில் அப்சைட் திசையில் சிக்ஸர் அடித்து பரபரப்பை எகிறச் செய்தார். 4வது பந்தை ஜோகிந்தர் ஷர்மா வீசும் முன்னர் தோனி அவரிடம் சென்று ஏதோ பேசினார்.
அதன்பின் நன்கு யோசித்து பார்த்த ஜோகிந்தர் ஷர்மா மிஸ்பாவின் கால்களுக்கிடையில் ஸ்லோ பாலாக போட்டார். அதனை மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று பின்புறம் தூக்கி அடித்தார். சிக்ஸர் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சானது. இறுதியாக ஐசிசி டி20 உலகக் கோப்பையை இளம் வீரர்களை கொண்டிருந்த இந்தியா வென்றது.
50 ஓவர் உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறிய இந்திய அணிக்கு புதிய கேப்டனாக தோனி பொறுப்பேற்று டி20 கோப்பையை வென்று கொடுத்தார். அதே நாளில் தான் நேற்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஒரேநாளில் இரட்டை மகிழ்ச்சியை கொடுத்த தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.