அணி நிர்வாகம் என்ன செய்தாலும் ஜடேஜா உதவி செய்வார்... - புகழ்ந்து தள்ளிய தோனி
கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 7 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.
இதில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும் நூழிலையிலான வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரெய்னா போல இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணியில் ஜடேஜா எப்போதும் முக்கிய பங்கு வகிப்பார். மேலும், ஜடேஜா அடுத்த சீசனிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜடேஜாவை குறித்து தோனி புகழ்ந்து பேசியுள்ளார். தோனி கூறுகையில், ஜடேஜா, வெவ்வேறு சூழ்நிலையிலும் புதிய கூட்டணிக்காக அணி நிர்வாகம் எது செய்தாலும் அதற்கு உதவ கூடியவர். அவரது இடத்தில் இன்னொருவர் சிறப்பாக களமிறங்க முடியும் என நினைக்கவே கூடாது. அதற்கு மாற்றே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.