டி20 கிரிக்கெட்டில் தோனி செய்த சூப்பரான சாதனை - ரோகித்துக்கு அடுத்து இவர் தான் தெரியுமா?

msdhoni chennaisuperkings CSKvPBKS
By Petchi Avudaiappan Apr 03, 2022 10:46 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தியாவில் நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் தொடர் எதிர்பாராத திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நாள் மற்றும் முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காமல் இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதனிடையே நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியின் மூலம்  சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாதனை ஒன்றை படைத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டி தோனியின் 350வது டி20 போட்டியாகும். இதனால் ரோகித் சர்மாவிற்கு(372 போட்டிகள்) அடுத்த டி20 கிரிக்கெட்டில் 350 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 336 போட்டிகளுடன் 3வது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 329 போட்டிகளின்4வது இடத்திலும், விராட்கோலி 328 போட்டிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.