கடந்தாண்டே கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி - கவனிக்க தவறிய ரசிகர்கள்
சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் கடந்தாண்டே செயல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனிடையே நேற்றைய தினம் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 40 வயதாகும் தோனி இந்தாண்டு கேப்டன்சி செய்துவிட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் இந்த முடிவு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜாவை நியமிக்க கடந்த 2 ஆண்டுகளாகவே தோனி மறைமுகமாகவே முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு வரை 4வது அல்லது 5வது வீரராக தோனி களமிறங்கி வந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் யார் சொல்லியும் கேட்காமல் 7வது வீரராக களமிறங்க தொடங்கினார். இதற்கு காரணமாக இருந்தது ரவீந்திர ஜடேஜா தான்.
ஒவ்வொரு போட்டியிலும் தனது பினிஷர் பணியை ஜடேஜா ஏற்றுக்கொண்டு களமிறங்கி விளையாடுவதைப் போல் தோனி அவரை தயார்படுத்தினார். இதன் வெளிப்பாடு பெங்களூருக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஜடேஜா காட்டிய அதிரடி அடுத்த தோனியாக அவரைக் காட்டியது. இதனால் கடந்த வருடம் முழுக்க அவரின் செயல்பாட்டை பார்த்துவிட்டு கேப்டன் பதவியை தோனி கொடுத்துள்ளார். ஆனாலும் இந்தாண்டு முழுவதும் அவருடன் இருந்துவிட்டு தான் விடைபெறவுள்ளார்.