சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் தோனி - ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடினாலும் எந்த அணியில் இடம்பெறுவேன் எனத் தெரியாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ளார் தோனி. கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இன்று விளையாடுகிறது. டாஸ் நிகழ்வின்போது தோனி கூறியதாவது: அடுத்த வருடம் மஞ்சள் உடையில் நீங்கள் என்னைப் பார்க்கலாம்.
ஆனால் சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவேனா என்று தெரியாது. நிலையில்லாத பல விஷயங்கள் நடக்கவுள்ளன. இரு புதிய அணிகள் வருகின்றன.
வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம் எனத் தெரியவில்லை.
விதிமுறைகள் தெரியாமல் எதுவும் முடிவெடுக்க முடியாது. எனவே அதுவரை காத்திருப்போம். அனைவருக்கும் நல்லதாகவே அமையும் என நம்புவோம் என்றார்.
தோனியின் இந்தப் பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். சமீபத்தில் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பாக இணையம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் தோனி.
அப்போது அவர் கூறியதாவது: என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம்.
எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். ரசிகர்களை நாங்கள் அங்கு காணலாம் என்றார்.