கருணாஸ் பட நடிகை கணவருடன் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

By Petchi Avudaiappan Apr 23, 2022 11:52 PM GMT
Report

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக நடிகையும்,எம்.பி.யுமான நவ்நீத் ரானாவும், அவரது கணவர் சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக அமராவதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவ்நீத் ரானாவும், அவரது கணவரான சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை போலீசார் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது என நவ்நீத் ரானா தம்பதியினருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லம்,  ரவி ரானா மற்றும் நவ்நீத் ரானா இல்லம் முன்பு பாதுகாப்பை பலப்படுத்தினர். 

இதனிடையே மும்பையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் வீடு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவதை கைவிடுவதாக நவ்நீத் ரானா - ரவி ரானா கூறினர். 

இந்நிலையில் சிவசேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ற்இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

நவ்னீத் தமிழில் கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.