ஏதோ ஒரு மாநாடு.. ஒரு வேல் எடுத்துட்டு ஊர்வலம் வந்தா நம்பிருவாங்களா? கனிமொழி தாக்கு
பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்துக்களுக்கு விரோதி
சென்னையில் திமுக சார்பாக செம்மொழி நாள் தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ-வில் மகளிர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் முதல்வராக கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின் தான் திருவாரூர் தேர் ஓடியது. திமுக இந்துக்களுக்கு விரோதி என்று தொடர்ந்து சொல்வார்கள்.
ஒரே இடத்தில் நின்ற தேரை ஓட வைத்தது கருணாநிதி தான். வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை நம்பிய கருணாநிதி, அதே இந்துக்களுக்காக தேரை ஓட வைத்தார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் இப்போதும் பேசி வருகிறார்கள். பெண்களை படிக்க வையுங்கள், திருமணத்திற்கு நான் உதவி செய்கிறேன் என்று அறிவித்தார்.
சாடிய கனிமொழி
யாரெல்லாம் படிக்க கூடாது என்று ஒரு மதம் வைத்திருந்ததோ, எந்த இந்துகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த சமூகத்தில் நம்பிக்கையை, சுயமரியாதையை உருவாக்கி கொடுத்தது திராவிட இயக்கம் தான். அதனால் ஏதோ ஒரு மாநாட்டை போட்டுவிட்டு, ஒரு வேல் எடுத்து ஊர்வலம் சென்று நான் தான் பக்தி,
மக்களை காப்பாற்றுகிறேன் என்ற பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. உண்மையில் மக்களுக்கு யார் பணியாற்றுகிறார்கள் என்பது மக்களுக்கும், மகளிருக்கும் நன்றாக தெரியும். திமுக இந்துக்களுக்கு விரோதமாக கட்சி இல்லை.
ஆன்மீகத்தை நம்பக் கூடிய மக்களும், நாத்திகத்தை நம்பக் கூடிய மக்களும் எனது இரு கண்கள். திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.