எம்ஜிஆர் பற்றி அவதூறு: பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன் - ஆ.ராசா!
எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.
இந்த போராட்டம் குறித்து எம்.பி. ஆ.ராசாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலித்த அவர் "எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
ராஜினாமா செய்யுங்கள்
நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.