அரசை நினைத்தால் கோபமாக வருகிறது - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி!
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தயார் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் சில மாதங்களாகவே பழங்குடியின மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து வந்தது. அந்த கலவரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தாயார் பேட்டி
இந்நிலையில் அந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அதில் " என்னுடைய மகளை நிர்வாணமாக்கி அழைத்து செல்வதற்கு முன் என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொன்று விட்டனர்.
இளையமகன் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் அவனை கஷ்ட்டப்பட்டாவது மேற்கொண்டு படிக்க வைக்க நினைத்தேன். இப்போது அவனும் இல்லை எனது கணவரும் இல்லை. எனது மூத்த மகனுக்கு வேலை இல்லை. இப்போது நான் எந்த நம்பிக்கையும் இல்லாமல் உதவியற்றவளாக உணர்கிறேன். எனது கிராமத்திற்கு திரும்பி செல்ல நான் விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பி செல்ல வேண்டும்.
அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது மகனையும் கணவரையும் கொன்று விட்டு எனது மகளுக்கு கொடூரமான செயலை செய்துள்ளனர். மணிப்பூர் அரசு ஏதும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே அனைத்தையும் இழந்து, நாங்கள் ஒரு சமூகமாக என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க அந்த தாயார் பேட்டியளித்துள்ளார்.