சிங்க குட்டிகளை திருட முயன்ற நபரை கொன்ற தாய் சிங்கம்
ஆப்பிரிக்கா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்க குட்டிகளை திருட முயற்சித்த நபரை தாய் சிங்கம் கடுமையாக தாக்கி கொன்றுள்ளது.
சிங்க குட்டிகளை திருட முயற்சி
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கானாவில் "அக்ரா உயிரியல் பூங்கா" உள்ளது. இந்த பூங்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், பெண் சிங்கம் இரண்டு வெள்ளை குட்டிகளை ஈன்றது.
இந்நிலையில் அந்த குட்டிகளை திருடும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட தாய் சிங்கம் தனது குட்டிகளை காப்பதற்காக அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளது.

அங்குள்ள ஊழியர்கள் அவரை உடனே மருத்துருவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்காலிகமாக பொதுமக்கள் வருகை ரத்து
மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “பாதுகாப்புப் பகுதியை தாண்டிய அந்த நபர் வெள்ளை சிங்கக் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். இதனை கவனித்த தாய் சிங்கம் அந்த நபரை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பூங்காவில் சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கானாவின் இயற்கை வள பாதுகாப்பு அமைச்சர் பெனிட்டோ கூறும்போது,
“தனது குட்டிகளை காப்பாற்றுவதற்கு சிங்கம் இவ்வாறு செய்திருக்கலாம். தற்காலிகமாக பூங்காவுக்கு பொதுமக்கள் வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.