ஒரே ஒரு கொசுக்கடியால் கோமாவுக்குச் சென்ற நபர் - 30 ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்...!

Germany
By Nandhini Nov 29, 2022 01:14 PM GMT
Report

ஒரு சிறு கொசுக் கடியால் கோமா நிலைக்கே ஒருவர் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு கொசுக்கடியால் கோமாவுக்குச் சென்ற நபர் 

ஜெர்மனி நாட்டை சேர்ந்த செபஸ்டியன் ரோட்ஸ்கே என்பவரை கொசு கடித்துள்ளது. கொசு கடித்ததில் அவருடைய ரத்தத்தில் விஷம் கலந்துள்ளது. இதனால், அவருடைய கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரலும் செயலிழந்திருக்கிறது. இப்படியே அடுத்தடுத்து அவரது உடல்நிலை பாதிப்புகள் மோசமாகி இருக்கிறது.

இதனையடுத்து, அவரது தொடையிலிருந்த தோலையும் மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து நீக்கியுள்ளனர். அவரது தொடையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் வீரியம் மிக்க பாக்டீரியாக்கள் அவரது இடது தொடையின் திசுக்களைப் பாதிவரை சாப்பிட்டுவிட்டுள்ளது. அவர் உயிரைக் காப்பாற்ற இதுவரை சுமார் 30 ஆபரேஷன்கள் மேல் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உயிர் பிழைக்கவே வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சியால் அந்த நபர் வெற்றிகரமாக உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட செபாஸ்டியன் ரோட்ஸ்கே பேசுகையில், நான் வெளியூர் எங்கேயும் போகவில்லை.

இங்கேயே தான் இருந்தேன். இங்கு எங்கோ தான் அந்த கொசு என்னைக் கடித்திருக்கிறது. டாக்டர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் நான் உயிர் பிழைத்துள்ளேன். ஆசியப் புலி கொசு கடித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

காடு கொசுக்கள் என்று அழைக்கப்படும் இந்த வகை ஆசியப் புலி கொசுக்கள், ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ், உள்ளிட்ட கடுமையான நோய்களையும் கூட எளிதாகப் பரப்பிவிடுமாம்.