மரிக்காத மனிதம்.. முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகுறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையின் போது பெரிதான உயிர்ச் சேதங்களையும், பாதிப்புகளையும் கண்டிராத உத்தரப்பிரதேசம் தற்போது மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியிருக்கிறது.
மாநில சுகாதாரத்துறை நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்து வந்தாலும் உண்மையில் நிலைமை அங்கு தலைகீழாகத் தான் இருக்கிறது.
மருத்துவக்கட்டமைப்பு ரீதியாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் `உத்தரப்பிரதேசத்தில் நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக' கூறி வருகிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் உத்திரபிரதேச அரசு திணறி வரும் நிலையில் உலகப் புகழ்பெற்ற இமாம்பரா மசூதி அறக்கட்டளை நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள மசூதிகள் அனைத்தையும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற முன்வந்துள்ளது.
இது குறித்து ஹுசைனாபாத் அறக்கட்டளை தலைமை நிர்வாகி மவுலானா ஜவாத் கூறுகையில் சக மனிதர்கள் துயரில் தவிக்கும் போது ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இஸ்லாம் மார்க்கத்தின் தலையாய கடமையாக இருக்கிறது.
நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றினால் கூட, அது மொத்த மனிதத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம்' என்கிறது குரான்.
அந்த வகையில் மக்களுக்கு நாங்கள் இந்த நேரத்தில் உதவக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, உலகப்புகழ் பெற்ற இமாம்பரா மசூதி மற்றும் ஹுசைனாபாத் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அனைத்து மசூதிகளையும் நாங்கள் தற்காலிக கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்ற முடிவெடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
எங்கள் அறக்கட்டளை மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இந்த நேரத்தில் இறைவனின் தொழுகை கூடாரங்களைச் சிகிச்சை மையங்களாக மாற்றி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மசூதிகளை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்துள்ள இமாம்பரா மசூதி நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன.
ஆம் மதங்களை கடந்து மனிதம் வாழ்கிறது.அங்கு.
{{ஆதாரம்: விகடன்}}