10 மாதங்களுக்கு பிறகு மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி - பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் இருந்தது. இதனால் மும்பையில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி முதல் மின்சார ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் மக்கள் வாழ்வாதாரம் கணக்கில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் அதில் படிப்படியாக வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கும் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி நேற்று முதல் பொது மக்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தவிர்த்து மற்ற நேரங்களில் பயணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பொதுமக்கள் ஆர்வமாக மின்சார ரயில்களில் பயணம் செய்தார்கள். அதே நேரத்தில் முகவசம் அணியாமல் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.