‘ப்பா என்னா வெயிலுய்யா’ - குளிர்பானங்களை கேட்டு வாங்கி குடிக்கும் குரங்கு கூட்டம்!
கடும் வெயில் காரணமாக குளிர்பான கடைகளுக்கு குரங்குகள் வரத்துவங்கியுள்ள சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரீ வரை சென்ற நிலையில், தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகமாக காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக் காடுகளில் மான், மயில் ,காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
இந்நிலையில், அதிக வெயில் தாக்கம் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளன.
அதன் படி கடந்த ஒரு வாரமாக குரங்குகள் கூட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குளிர்பானம் கடைக்கு வந்து குளிர்பானம் கேட்டு வாங்கிக் குடித்துச் செல்கிறது.
அதிக வெப்பம் காரணமாக மனிதர்கள் போல் வன விலங்குகளும் குளிர் பானத்தை தேடி கடைக்கு வருவது பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.