தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது , இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.
மிரட்டும் குரங்கு அம்மை
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் :
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
விளக்கம் கொடுத்த அமைச்சர்
இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை. அவ்வாறு செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர்.
சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.