சொத்துகுவிப்பு வழக்கு: சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலவுடன் கைது செய்யப்பட்ட இளவரசி இன்று விடுதலை ஆகிறார். சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவுபெற்று கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆனார். முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை அவர் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதனிடையே இளவரசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தார்
இந்நிலையில் இன்றுடன் இளவரசியின் தண்டனை காலம் நிறைவடைய உள்ளதால், இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதனிடையே சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டநிலையில், இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலை செய்யப்படுவது தள்ளிப்போகிறது.