எனக்கு பணம் தான் முக்கியம்... கிரிக்கெட் இல்லை : ஹர்திக் பாண்ட்யா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
பணத்திற்காக தான் கிரிக்கெட்டிற்கு வந்தேன் என ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ள சூழலில் இந்திய ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வரும் பெயர் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வரும் அவர் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக பாண்ட்யா பேட்டிங் மட்டுமே செய்வதும், பவுலிங் செய்ய முயற்சிக்காததும் கடும் எதிர்மறையான கருத்துகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட்டில் பணத்தின் தாக்கம் குறித்து இணையதளம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பாண்ட்யா, கிரிக்கெட்டில் மட்டும் பணம் இல்லாவிட்டால் இன்று நான் ஏதாவது ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருப்பேன். பணம் கிடைத்தாலும் நாங்கள் ஒன்றும் உயரே பறக்கவில்லை, எதார்த்தத்தை உணர்ந்து தரையில் கால்பதித்துத்தான் உண்மையை அறிந்தே வாழ்கிறோம். நான் ஏதோ பறப்பது போல் பலருக்கும் தெரியலாம் ஆனால் நான் அப்படியல்ல.
விளையாட்டை வாழ்க்கையாக எடுத்து இளைஞர்கள் சாதிக்க பணம் முக்கியமானது. ஆனால், கிரிக்கெட்டில் பணம் மட்டும் இல்லாவிட்டால் எத்தனை இளைஞர்கள் இந்தவிளையாட்டை ஆர்வமாக விளையாடுவார்கள்.
நண்பர் ஒருவர் என்னிடம் கிரிக்கெட்டில் பணம் கூடாது, நீங்களெல்லாம் இளம் வீரர்கள் என்றார். அவர் பேச்சில் எனக்கு உடன்பாடில்லை, கிராமத்திலிருந்து வரும் ஒரு வீரர் சம்பாதிக்கும் பணம் அவருக்குக் குடும்பத்துக்கு பேருதவியாக இருக்குமே என்றேன். பணத்தை பற்றி பேசக்கூடாது, பணம் சம்பாதிப்பது தவறு என்ற தவறான பார்வை இன்னமும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் சம்பாதிப்பதை யாரும் குறைசொல்ல மாட்டார்கள், பணத்துக்காக நேர்மை, உண்மை, விசுவாசம், கடமை அனைத்தையும் அடகு வைப்பதைத்தான் பெரியோர்கள் விமர்சித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதே தவறு என்று யாரும் கூறவில்லை என்றும் பாண்ட்யா கூறியுள்ளார். பரோடாவில் அவ்வளவாக நிதி வச்தி இல்லாத குடும்பத்தில் பிறந்து சிறிய குடியிருப்பில் இருந்த பாண்ட்யா சகோதரர்களுக்கு ஐபிஎல் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.