ஹரி நாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் பண மோசடி புகார்

Hari nadar
By Petchi Avudaiappan Jun 15, 2021 10:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 பண மோசடி புகாரில் கர்நாடக சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவர் மீது பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த பண மோசடிப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை பெங்களூர் போலீசார் கடந்த மாதம் கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஹரி நாடார் மீது குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் ரூ.100 கோடி வங்கிக்கடனை குறைந்த வட்டிக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

ஹரி நாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் பண மோசடி புகார் | Money Cheating Complaint Against Harinadar

குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் பஷீர் ஆகிய இருவரும் இணைந்து குஜராத்தில் பலசரக்கு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

அங்கிருந்து அவர்கள் அரபு நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்காக வங்கியில் ரூ.100 கோடி கடனாகப் பெற முயற்சித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோரின் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரி நாடார் இரண்டு தொழிலதிபர்களையும் தொடர்பு கொண்டுள்ளார்.

தான், கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட் (CAPITAL UP Investments) என்ற கம்பெனியின் ஆசிய நாடுகளுக்கான நிர்வாகி எனவும் இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்துள்ளார்.

இதனை நம்பிய தொழிலதிபர் இருவரையும் ஹரி நாடார் சென்னை தி.நகர் வரவழைத்து அவரின் அலுவலகத்தில் வைத்து ரூபாய் 100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும் இதற்கு 2 சதவீத கமிஷன் தனக்கு தர வேண்டுமெனவும் ஹரி நாடார் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மூன்று தவணைகளாக ரூபாய் 1.5 கோடி பணத்தை ஹரி நாடாருக்கு தொழிலதிபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வங்கி கடன் குறித்து கேட்டபோதெல்லாம் தற்போது தான் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் தேர்தல் முடிந்து உடன் வங்கி கடன் உடனடியாக பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வங்கி கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தொழிலதிபர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு ஏதேதோ காரணம் சொல்லி ஹரி நாடார் சமாளித்ததாகவும், பின் திருநெல்வேலி வருமாறு விடுத்த அழைப்பின் பெயரில் அங்கு சென்ற தொழிலதிபர்கள் தங்களுக்கு லோன் வேண்டாம் எனவும் தாங்கள் செலுத்திய ரூபாய் ஒன்றரை கோடி பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு ஹரி நாடார் தான் விரைவிலேயே அந்த பணத்தை தருவதாக கூறி, அதன் பின் அவர்கள் தொடர்பு கொண்டாலும் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான் தொழிலதிபர்கள் இருவரும் தாங்கள் ஹரி நாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கடந்த மாதம் தி.நகர் காவல் நிலையத்தில் ஆன்லைன் புகார் அளித்துள்ளனர். விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தொழிலதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்பேரில் தொழிலதிபர் அப்துல் பஷீர் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தங்களிடமிருந்து ஹரி நாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறும் புகார் அளித்தார். ஏற்கனவே வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டு தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீது தொழிலதிபர்கள் இருவர் புகாரளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.