பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கொரோனா? - திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என குழப்பம்
பாகிஸ்தான் அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரையிறுதிப்போட்டியில் விளையாடுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றுகளில் யாராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்த பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. அதற்கு சற்றும் வலிமை குறையாத அணியாக ஆஸ்திரேலியா உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் அரையிறுதியில் கலந்துக்கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை அவர்கள் தூங்கி எழுந்த போது லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. நேரம் போக போக காய்ச்சல் அதிகரித்ததால் அணி வீரர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தது அனைவருக்கும் நிம்மதியை தந்தது. எனினும் அவர்கள் இருவராலும் நேற்றைய நாள் முழுவதும் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. இன்றும் காய்ச்சல் நீடித்து வருகிறது. இதனால் இன்று நடக்கும் ஆஸ்திரேலிய போட்டியில் இடம் பெறுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் இவர்கள் இருவரும் இல்லாமல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என கூறப்பட்டுள்ளது.