டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனை படைத்த முகமது ரிஸ்வான் - குவியும் பாராட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் சர்வதேச டி20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 64 ரன்களும், பார்டன் கிங் 43 ரன்களும், சம்ராஹ் ப்ரூக்ஸ் 49 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 45 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், பாபர் அசாம் 53 பந்துகளில் 79 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை எளிதாக எட்டிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் எடுத்த முகமது ரிஸ்வான் இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்த போட்டியின் மூலம் நடப்பு கிரிக்கெட் ஆண்டில் தனது 2000வது டி20 ரன்னை பதிவு செய்த முகமது ரிஸ்வான் இதன் மூலம் ஒரே ஆண்டில் (டி20 போட்டிகளில்) 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.