தோனிக்கு ஒரு நியாயம்.. விராட் கோலிக்கு ஒரு நியாயமா? எழுந்த சர்ச்சை!
பெங்களூரு - கொல்கத்தா இடையேயான போட்டியில்விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் முன்னதாக நடைபெற்ற பெங்களூரு - கொல்கத்தா இடையேயான போட்டியில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது.
அந்த போட்டியில் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல் டாஸ் பீமர் பந்து விராட் கோலியின் இடுப்புக்கு மேலே வந்தது. இதனால் சிக்சர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த பந்தை அடித்து பவுலரிடமே கேட்ச் கொடுத்தார்.
அப்போது நடுவர்கள் அதனை அவுட் கொடுத்ததை தொடர்ந்து, விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். அதில் அவரின் இடுப்பை (1.04மீ) விட பந்து (0.92மீ) குறைவான உயரத்தில் வந்ததால் 3-வது நடுவர் மீண்டும் அவுட் என அறிவித்தார். அதற்கு ஆர்சிபி ரசிகர்களும், சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முகமது கைஃப்
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு நடந்த லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் தோனியின் பேட்டுக்கு கீழே ஒரு பந்து சென்றது. அது அகலக்கோட்டுக்கு வெளியே சென்றதால் நடுவர்கள் ஒயிட் கொடுத்தனர்.
இந்நிலையில், அதே போல விராட் கோலிக்கு எதிராக பீமர் பந்து வீசப்பட்டும் நடுவர்கள் நோபால் வழங்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். தோனிக்கு ஒரு நியாயத்தை கொடுத்து, விராட் கோலிக்கு மற்றொரு நியாயத்தை கொடுத்துள்ளதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, கைஃப் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தெளிவாக விளையாட முடியாத பீமர் பந்தில் விராட் கோலி அவுட்டானார். ஆனால் தோனியின் பேட்டின் கீழே சென்ற ஒரு பந்து ஒய்ட் என அறிவிக்கப்பட்டது. கேமராக்கள், ரிப்ளை, டெக்னாலஜி ஆகியவை இருந்தும் இது போன்ற தவறுகள் செய்யப்படுகின்றன. இது மோசமான அம்பயரிங்" என்று தெரிவித்துள்ளார்.