காசு முக்கியமில்லை... சென்னை அணி தான் முக்கியம்: ரசிகர்களின் மனதை வென்ற மொய்ன் அலி
சென்னை அணிக்காக மொய்ன் அலி விளையாட ஒப்புக்கொண்ட தகவலை சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதன்படி சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
மொய்ன் அலி கடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்திருந்தாலும் மொய்ன் அலிக்கு பதிலாக டூபிளசியை தக்க வைத்திருக்கலாம் என சென்னை ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேசமயம் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொய்ன் அலி தனக்கு 6 கோடி சரியானது இல்லை என முடிவு எடுத்து மெகா ஏலத்தில் கலந்திருந்தால் நிச்சயம் அவருக்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மொய்ன் அலி எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்காமல் சென்னை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்ததாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் வீரராகவோ, கடைசி வீரராகவோ தான் தக்க வைக்கப்பட்டாலும் தனக்கு அதை பற்றி எந்த கவலையும் இல்லை என்று, சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாங்களும் அவருக்கு அதிக முன்னுரிமை கொடுத்து அவரை மூன்றாவது வீரராக தக்க வைத்தோம் என . காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.