காலச்சக்கரம் மாறுகிறது - நூற்றாண்டு போராட்டம் முடிவிற்கு வந்து விட்டது - பிரதமர் மோடி உரை..!!
இன்று மதியம் 12:29 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு நாட்டின் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
பிரதமர் மோடி உரை
அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டைக்கு பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது என்று கூறி, கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார் என்று தெரிவித்த அவர், இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என்றும் 1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றார்.
கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம் என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்து, அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம் எனக்கூறினார்.
காலச்சக்கரம் மாறியதை...
ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது, ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி, இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார் என்றார்.
ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளி இன்று கொண்டாடுவதாக தெரிவித்த அவர், ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்ததாக பூரிப்புடன் தெரிவித்தார். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது என்றும் ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம்கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.