"கோ பேக் மிஸ்டர் க்ரைம் மினிஸ்டர் " - பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு போஸ்டர்களை ஒட்டிய காங்கிரஸ்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
புனேவில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாளை புனே செல்கிறார். அங்கு பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புனேவில் உள்ள தக்துசேத் கோவிலில் காலை 11 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அவர் திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் திலகரின் நினைவுநாளான ஆகஸ்ட் 1ம் தேதி இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
மோடிக்கு விருது வழங்க உள்ள விழாவில் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய தலைவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொள்ள உள்ளார்.
"கோ பேக் மோடி" போஸ்டர்கள்
இந்நிலையில் புனே நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் புனே நகர் முழுவதும் "கோ பேக் மோடி" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. சாலையோரங்கள், போக்குவரத்து சிக்னல்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் இளைஞர் பிரிவு புனே நகரின் சில பகுதிகளில் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
அதில் சில போஸ்டர்களில் "கோ பேக் மிஸ்டர் க்ரைம் மோடி" என்றும் "மிஸ்டர் பிரதம மந்திரி, மணிப்பூருக்குச் செல்லுங்கள், பாராளுமன்றத்தை எதிர்கொள்ளுங்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது.