ஜி-7 உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் முக்கிய கூட்டமைப்பான ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சிமாநாடு ஜூன் 11 -ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கார்ன்வாலில் நடைபெறுகிறது.
மேலும் இந்தியாவைப்போல ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவிற்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஜி 7 மாநாட்டிற்கு முன்னதாக இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை ஜி 7 உறுப்பு நாடுகள் ஆகும். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவின் தலைவர்களை விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,பிரிட்டனில் கொரோனா அதிகரிப்புக் காரணமாக சமீபத்தில் தனது வருகையை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.