யுத்தம் 2024ம் ஆண்டில்தான்... இந்த மாநில தேர்தல் அல்ல... - பிரதமர் பேச்சுக்கு பிரசாந்த் கிஷோர் அதிரடி
நேற்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
நேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வென்று ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியமைத்து, 2 வரலாற்று சாதனைகள் நிகழ்த்தியது.
இந்த சட்டமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளம் என்பதால் இந்தியா முழுவதுமுள்ள மக்களால் உற்று நோக்கப்பட்டது. உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் நேற்று மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.
நேற்று மாநில தேர்தல் முடிவுகளின் வெற்றியைக் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றார். இந்த பேச்சுக்கு தற்போது பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் பேசுகையில், இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தலை வைத்து அல்ல. இது அவருக்கே நன்றாகத் தெரியும். இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உளவியல் ரீதியிலான ஆதாயத்தை பெற மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சி இது. இந்த தவறான கருத்துக்கு உடன்பட்டு விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.