பிரதமருக்கான கடமை என்ன என்பதே பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்..!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பதில் அளித்து பேசினார்.
அப்போது எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
ராகுல் காந்தி பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் தனது உரையில் பெரும்பாலான நேரத்தை நகைச்சுவை செய்வதிலேயே கழித்தார். தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளனரா என்பது தெரியவில்லை.
மணிப்பூரில் நான் நேரடியாக கண்டதை வைத்துதான் நாடாளுமன்றத்தில் பேசினேன். மணிப்பூர் என்ற மிக முக்கியமான பிரச்சனை குறித்து பேசிவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவர் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக நான் கூறியதை திரித்துக் கூறுகிறார் பிரதமர் மோடி. மணிப்பூர் நிலவரம் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தான் தற்போதைய சூழல் இந்திய ராணுவத்தை அனுமதித்து இருந்தால் மணிப்பூரில் 2 மணி நேரத்தில் அமைதி நிலவியிருக்கும்.
பணிப்பூர் பற்றி எரியும் சூழலில் அதை மறந்தது போல் பிரதமர் மோடி பேசியுள்ளார். பாரதமாதா என்ற வார்த்தை மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமளிக்கிறது.
கடமை என்ன என்பது தெரியவில்லை
பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டேன் பிரதமருக்கான கடமை என்ன என்பதே பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததேயில்லை. குறைந்த பட்சம் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்றிருக்க வேண்டும். பிரதமர் மணிப்பூருக்கு செல்வதற்கான அறிகுறிகள் கூட தெரியவில்லை.
நான் மீண்டும் சொல்கிறேன் இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்துவிட்டது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல வாய்ப்புகள் இருந்தும் பிரதமர் அதை பயன்படுத்தவில்லை.