பிரதமர் மோடியை பற்றி விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இயக்குநர் பாக்யராஜ்
சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இளையராஜாவின் இந்தக் கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில், இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
‘நீ கருப்பு என்றால், நான் அண்டங்காக்க கருப்பு’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது பெரும் பேசும்பொருளாக மாறியது.
இதனையடுத்து, பலர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் இது குறித்து கூறுகையில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தன் மீதான எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், பிரதமர் மோடி அதைப் பற்றி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாக்யராஜின் இந்த கருத்தை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
👏👏👏👏👏 pic.twitter.com/jE8vtPJYVd
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) April 20, 2022